சீர்காழி: சீர்காழி அருகே வைதீஸ்வரன் கோயில் தியாகி குமரன் தெருவில் 2003ம் ஆண்டு பொது கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.காலப்போக்கில் கழிப்பறை சரிவர பராமரிக்கப்படாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் கழிப்பறை கட்டிடம் இருந்து வருகிறது. பழுதடைந்த கழிப்பறை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கழிப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன், பேரூராட்சித் துணைத் தலைவர் அன்புச்செழியன் சம்பவ இடத்திற்கு சென்று பழுதடைந்த பொது கழிப்பறை கட்டிடத்தை பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பழுதடைந்த கழிப்பறை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்தனர் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.